2/6/13

ஒச்சப்பனும் நானும் .. நம் தாய்மொழிகளும்-தருமி

1 கருத்துரைகள்
னக்கும் ஒச்சப்பனுக்கும் நடந்த சில கருத்துப் பரிமாற்றங்களை, தேவை கருதி, உங்கள் முன் வைக்கிறேன்.



1830-ல் உருவான பெல்ஜியத்தின் அண்டை நாடுகள் நெதர்லேண்டு. ஜெர்மனி,. ப்ரான்ஸ், லக்ஸம்பெர்க். கிறித்துவர்களின் இரு கூறுகளின் நடுவே நடந்த குழப்பங்களால் இந்நாடு தனியாகப் பிரிந்தது. அப்போது பிரஞ்சு மொழிதான் அரசியல் மொழியாக இருந்தது. அரசியல், வகுப்பு வாத வேறுபாடுகள் பலவும் இருந்த இந்த நாட்டில் பின்னாளில் மொழியும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தின. 

1970 வரை ஒன்றாக இருந்த பெல்ஜியம் இந்தப் பிரச்சனைகளால் எழுந்த பல அரசியல் சிக்கல்களினால் பெடரல் ஸ்டேட்டாக மாறியது. இப்போது இது மூன்று பிரிவுகளாக உள்ளன: வடக்குப் பகுதியில் டச் மொழி பேசும் ஃபாளண்டர்ஸ்; தெற்குப் பகுதியில் பிரஞ்சு மொழி பேசும் வல்லோனியா; இரண்டிற்கும் நடுவில் இரு மொழி பேசும் ப்ருசல்ஸ். பிரிவுகளாக இருந்தாலும் பெல்ஜியம் ஐரோப்பிய யூனியனில் நல்ல பொருளாதார மேம்பாட்டோடு இருக்கிறது.

ஃப்ளாண்டர் மொழி பேசுவோர் ஃப்ளெமிஷ் என்று அழைக்கப்படுகிறார்கள். (நம் ஒச்சப்பன் இந்தக் குழுவைச் சார்ந்தவர்.) தங்கள் மொழி அதிகம் பேசப்படாமல், போற்றப்படாமல் பிரஞ்சு மொழிக்கே அதிக முக்கியத்துவம் இருந்த நிலையை தங்களது மொழிப்பற்றால்  முற்றாக மாற்றினர். இப்போது பிரஞ்சு மொழிக்கு முக்கியத்துவம் இழந்து ஃப்ளாண்டர்ஸ் மொழியே முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஒச்சப்பன் ஒருவன் தன் மொழியை இழந்தால் அவனது பழம் பண்பாடு, சமூகக் கட்டுக்கோப்பு, ஒற்றுமை, கலாச்சாரம் எல்லாவற்றையும் இழந்து விடுவான். அது அந்த சமூகத்தினை முற்றாக அழித்து விடும் என்கிறார். இந்த உணர்வுகளை ஊக்குவித்த பின்பே ஃப்ளாண்டர்ஸ் மொழி வலுப்பெற்று இன்று எங்களின் தாய்மொழியை நாங்கள் காப்பாற்றியுள்ளோம் என்கிறார்.
அவர் எங்கள் நாட்டில் நடந்த மொழிப் பரிணாம வளர்ச்சி அப்படியே மாறி, எதிர்த் திசையில் உங்கள் தமிழ்நாட்டில் நடக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். இங்கே ஆங்கிலத்தின் பின்னாலேயே எல்லோரும் ஓடுகிறீர்கள். அது மட்டுமின்றி ஆங்கிலம் அறிந்தோர் தமிழ் மட்டும் தெரிந்த தமிழர்களை குறைவாகக் கருதுகிறீர்கள். அந்த பாவப்பட்ட தமிழர்களும் ஆங்கிலத்தைப் போற்றுவதையும் பார்க்க முடிகிறது. இது ஒரு சமூகத்தின், அதன் கலாச்சாரத்திற்கு அடிக்கப்படும் ஒரு சாவு மணி என்பதை உங்கள் சமூகம் புரிந்து கொள்வது நல்லது.

அரசு இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தமிழ் பயிற்று மொழியாக வேண்டும். தமிழ் தெரிந்தோருக்கே அரசு வேலைகள் என்ற கொள்கையை அரசு எடுக்க வேண்டும் என்கிறார். இதற்காக அவர் எனக்கு எழுதிய மயிலின் நகலை இங்கே கீழே கொடுத்துள்ளேன்.


Dear Sam,

The Sint-Lievens College was founded in 1930 for the insight and the deployment of Lieven Gevaert (Afga-Gevaert), an industrialist with an eye for social and Flemish needs for Dutch school education. The pride of your own mother-tongue, Dutch was the key for the revival of the Flemish culture, dominated for years by French invasions and domination,which chased away very famous Dutch writers from Antwerp (Belgium) to the Netherlands. Nowadays Flanders grew out to a strong region at the top of world technology, proud leaving behind the French hegemony.

Remarkable reverse evolution happens in Tamil Nadu, people are dominated by the foreign language, English. It is considered English-speaking ones are  the elite of Tamil society. Many such are not able anymore to read or write their own mother-tongue Tamil,  making them foreigners in their own land, alienated from their own culture, looking down on their origin and the common Tamilians as lower caste, copying the English, and exploiting other non-English-speaking Tamils in a worse way. They can't be called proud Tamilians anymore as they chose to reject all Tamil values and its tradition and culture, not aware that they lost their personal-identity. They may praise themselves lucky for the tolerance of the majority Tamils.

Only the Tamil government can preserve their culture by making Tamil a compulsory medium of education. Tamil is one of the oldest languages and still remains as a spoken classical language, with its great Tamil culture, traditions and great jewels of Tamil literature. The more languages you know the more cultures you understand. But  you have an identity only when you master your own mother-tongue. A proud Tamil should know his language and his culture.


Greetings
Henk

நன்றி: உயர்திரு.தருமி அவர்களின் வலைத்தளத்தில் இருந்து மறுபதிப்பு.

வலை தளம் : தருமி

மேலும் வாசிக்க

1/21/13

பாத்துமாவின்ட ஆடு - சில குறிப்புகள்!

0 கருத்துரைகள்


மலைச் சாரலைப் போல், அமைதியான அலைகடலைப் போல், ஆர்ப்பாட்டமில்லாத, ஆரவாரமில்லாத, அமைதியான, தென்றலைப் போல் மயிலிறகில் நம்மை வருடும் விதமான எழுத்தைப் படைப்பதில் மலையாள இலக்கிய உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர்.

நாம் பிரமிக்கும் தமிழ் இலக்கிய உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர். மற்றும் எழுத்தாளர்களின் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்கள் இவரைப் பற்றி குறிப்பிடுகையில் தமிழில் பஷீருடன் ஒப்பிட்டுப் பேச நம்  மொழியில் எவரும் இல்லை. அவருடைய எழுத்து முற்போக்கு இலக்கியத்தின் அசலுக்கு மிசச்சிறந்த எடுத்துக்காட்டு. புதிய தலைமுறை அதைப் படிக்க வேண்டும். என்கின்றார்.

1908ம் வருடம் கேரளாவில் வைக்கம் தாலுக்காவில் தலயோலப் பிரம்பில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே வீட்டைவிட்டு ஓடி, இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். சுதந்திரப் போராட்ட வீரராகச் சென்னை, கோழிக்கோடு, கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பகத்சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கி செயல்பட்டார். அமைப்பின் கொள்கை இதழான உஜ்ஜீவனம் எனும் வார இதழையும் துவக்கினார்.

பத்தாண்டுகள் பாரதமெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்காவிலும் அரேபியாவிலும் சுற்றினார். இக்காலக்கட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை. ஜந்தாறு வருடங்கள் இமயமலைச்சாரலிலும்,கங்கை கரையிலும் இந்து துறவியாகவும், இஸ்லாமிய சூஃபியாகவும் வாழ்ந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மத்திய அரசுகளின் ஓய்வூதியம், ஃபெல்லோஷிப், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட்., சம்ஸ்கார தீபம் விருது, பிரேம் நசீர் விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, முட்டத்து வர்க்கி விருது, வள்ளத்தோள் விருது, ஜித்தா அரங்கு விருது போன்ற மாநில அரசின் விருதுகளைப் பெற்றவர். 1994ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி காலமானார்.

இவருடைய நாவலான “எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது” என்கின்ற நாவலை மார்க்கிசிய கருத்தியலுக்கு எதிரான பிற்போக்கு நாவலென்று கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. எதிர்த்தவர்களில் முக்கியமானவர் அன்றைய கேரள நிதிமந்திரியாக இருந்த அச்சுமோனோன் என்பவர்.

ஆனால் அந்த நாவல் மத்திய சாகித்ய அகாதாமியால் தேர்வு செய்யப்பட்டு பதினெட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு புத்தகங்களாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

பிறகு சில வருடங்களுக்கு பிறகு கேரள சட்டமன்றத்தை கம்யூனிஸ்ட் கைப்பற்றியது அப்பொழுது துணைப்பாடநூலில் “எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது” நாவலையும் அவர்கள் சேர்த்துக் கொண்டார்கள். கம்யூனிஸ்ட் அரசின் அதிகாரத்தில் ஒரு முசல்மானின் புத்தகத்தை நான்டீட்டெய்லாக ஏற்றுக் கொண்டதை கேரள இலக்கிய வாசக உலகம் அதிசய நிகழ்வு என்று கூறுகின்றார்கள்.

முதலில் கடுமையாக எதிர்த்த அச்சுமோனனும் பஷீரின் நாவலை நான்டீடெயிலாக தேர்வு செய்த கமிட்டியில் இருந்தார் என்பதும் ஒரு அதிசயம் என்கின்றார்கள்.

1954ம் வருடம் பாத்துமாவின் ஆடு நாவலை எழுதியவர் ஜந்து வருடங்களுக்கு பிறகுதான் வெளியிட்டேன் என்று முன்னுரையில் குறிப்பிடுகின்றார். இந்த கதை எழுதிய பொழுதுகளில் தூங்காமல் இரவு, பகல் என கடுமையான பணியினால் மனஅழுத்தம் ஏற்ப்பட்டு சிகிச்சை பெற்ற பொழுது எழுதியது என்கின்றார்.

பஷீர் அவர்கள் நெடுங்காலமாக நாடோடியாக அலைந்து திரிந்து ஒரு ஏகாந்த வாழ்க்கைக்கு பிறகு மூக்கு நுனி கோபத்துடன் தலயப்பிரம்பில் அவர் வீட்டுக்கு திருப்பி வருகின்றார். அவர் தனியாக எழுதுவற்கும் சிந்திப்பதற்குமாக வீட்டுக்கு எதிரே ஒரு சிறிய ஓட்டு வீடு! அது ஒரு அழகான வீடு என விளிக்கின்றார், அதை கட்டிடமாக கட்டுவதற்கு கல்லும் மண்ணும் சுமந்தேன் என்கின்றார்.

அழகுக்காக சில வேலைப்பாடுகள் செய்திருக்கின்றேன் உயரமாகக் கல்கட்டி, வெள்ளை மணல் தூவிய முற்றத்தைச் சுற்றிலும் அழகழகான செடிகள் இருந்தன. மலர்ப்பந்தலில் முல்லையும், பிச்சிபூவும் படர்ந்திருந்தன, முற்றத்தின் ஓரங்களில் கொய்யா மரங்கள் வளர்ந்துகொண்டிருந்தன. குடிப்பதற்கும், குளிப்பதற்குமென அங்கே இரண்டு குளங்கள் இருந்தன, தோட்டம் நிறைய தென்னையும் வாழையும் மற்றும் பல வகையான விருட்சங்களையும் நட்டு இருக்கின்றேன்.இதில் மாமரமும் உண்டு என்கின்றார்.

கற்பனையில் நாம் நினைக்கும் பொழுது எவ்வளவு அழகான வீடு! கிராமத்து வீடுகள் என்றாலே மிக அழகு, தூய்மையான காற்று, சுற்றிலும் மரங்கள் என அவர் குறிப்பிடுகையில் நம் முகத்தில் குளிர் காற்று வீசுகின்றது அவரின் வர்ணணையில்.

ஆனால் அவர் ஏகாந்த வாழ்க்கையில் இருந்த போது அந்த அழகான வீட்டை ஒரு அதிகாரிக்கு வாடகைக்கு விட்டுவிடுகின்றார்கள் அவரின் சகோதரர்கள். அதனால் எப்பொழுதும் தனிமையில் இருக்கும் பஷீர் தன் சகோதரிகள், சகோதரர்கள் அவர்களின் நிறையக் குழந்தைகள் அவருடைய “உம்மா” என்று எப்பொழுதும் சந்தைக்கடை போலிருக்கும் ஓலைக் கூரை வேய்ந்த வீட்டுக்குள் முடங்க வேண்டிய சூழ்நிலை. 

இதில் தன் சகோதரி பாத்துமாவின் ஆடு ஒரு கதாபாத்திரமாக அந்த வீட்டில் சுதந்திரமாக உலாவுகின்றது. அவருடைய ஒரு நாவல் புத்தகத்தை தின்றும் விடுகின்றது. அது மட்டுமில்லாமல் குழந்தையின் அரைநிஜாரின் பையில் வைத்திருந்த ஆப்பத்தை சுவைக்க நிஜாரை தின்கின்றது. பையிலிருந்த சில சில்லரைக் காசுகளையும் சேர்ந்து விழுங்கி விடுகின்றது. ஆட்டின் மலத்தில் காசு வருமா...? என்று அன்றைய நாள் முழுவதும் அதன் மலத்தை சோதித்து பார்த்தேன் காசு வரவில்லை என்று சிரிக்கின்றார்.

பள்ளிக்கு போகும் சில பெண்கள் குறிப்பாக “சுருட்டை முடிக்காரி” ஒருத்தி தான் ஒரு எழுத்தாளர் எனவும் தன் எழுத்துகளால் கவர்ந்து தன்னைப் பார்த்து செல்கின்றாள் என நினைத்து பெருமிதம் கொள்கின்றார்...! 

ஒரு நாள் அவரை நோக்கி வருகின்றார்கள் அந்தப் பெண்கள். ஆட்டோகிராப் போட பேனாவை எடுத்து தயாராக வைத்துக் கொள்கின்றார் ஆனால் அந்த பெண்களோ சாம்பக்காய் (புளியம்பழம்) கேட்கின்றார்கள்...அவர்கள் நாவில் எச்சில் ஊற பார்த்தது தனக்கு பின்னால் இருந்த சாம்ப மரத்தில் தொங்கும் சாம்பக்காய்களை என்று தெரிந்து, கோபத்தில் சாம்பக்காய்களை விலைக்கு விற்கின்றார் அதுவும் சிறிய பழங்களாக தருகின்றார். அவர்கள் பெரிய பழங்களாக கேட்கின்றார்கள் தர மறுக்கின்றார். அதே நேரத்தில் தன்னிடம் ஆட்டோகிராப் கேட்டு வந்த கறுப்பான ஒரு பெண்ணுக்கு கேட்காமல் பெரிய பெரிய சாம்பக் காய்களாக பறித்து நிறைய தருகின்றார். 

அடிக்கடி சாயா குடிக்கின்றார், பீடி பற்ற வைத்துக் கொள்கின்றார் குழந்தைகளுக்கு நேந்திரன்பழம், சக்கபழம்(பலா), புர்த்திசக்க(அன்னாசிபழம்) வெட்டி தருகின்றார். வீட்டு செலவுக்கு என்று பணம் தருகின்றார், சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிக்க தர மறுக்கின்றார், என சுவாரஸ்யமான சின்ன சின்ன சம்பவங்களை பிசகில்லாமல் விவரிக்கின்றார்.

பாத்துமாவின் ஆடு கர்ப்பமாகின்றது அதன் பிரசவத்தை எல்லாரும் எளிதாக எடுத்துக் கொள்ள பஷீர் மிகுந்த பரபரப்புடன் இருக்கின்றார். அது அழகான ஒரு குட்டியை ஈன்றெடுக்க அதை கொஞ்சுகின்றார், ஆட்டுப் பாலை விற்று தன் குடும்ப செலவுகளை சாமாளிக்கலாம் என்று பாத்துமா இருக்க, வீட்டாட்கள் ஆட்டுப் பாலை திருடிக் குடிக்கின்றார்கள், பாத்துமா இவரிடம் முறையிட இவர் சமரசம் செய்து அவளே வீட்டாட்களுக்கு தினமும் பால் தருகின்றாள் என கதையை முடிக்கின்றார், ஆனாலும் படித்து முடித்து சில வருடங்களாகியும் நம் மனதை விட்டு அகலாதிருப்பது பாத்துமாவின் ஆடுவும்! மற்றும் அலட்டி திரிந்த பஷீர் தாத்தாவின் அலட்டலான எழுத்துகளும். 

பாத்துமாவின் ஆடு நாவலைச் செம்மையாக மொழி பெயர்த்த குளச்சல் மு. யூசுப் அவர்கள் சில வார்த்தைகளை மலையாள மொழியில் உள்ளதை அப்படியே தருகின்றார் . அதற்கான விளக்கத்தை கீழே கொடுத்திருக்கின்றார். சில மொழி பெயர்ப்பு நூல்களில் பார்த்தால் சில வார்த்தைகளை அப்படியே தமிழில் மொழி பெயர்க்கின்றார்கள் அது அந்த எழுத்தாளர்களின் தன்மையை, கற்பனையை சிதைத்து விடுகின்றது அப்படிச் செய்யாமல் இப்படித் தந்தமைக்காக யூசுப் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
---------------------------------------
பதிப்பகம் : காலச்சுவடு,
விலை : 90.00
---------------------------------------
மேலும் வாசிக்க

1/3/13

தலைவா, வா! - புத்தக விமர்சனம்!

3 கருத்துரைகள்



ஒரு முக்கியமான புத்தகம் வாங்கச் சென்ற போது கண்ணில் பட்டது இந்த புத்தகம். தீர்ந்து போயிருந்த புத்தகங்களின் மிச்சமாய் ஒரே…ஒரு…புத்தகம் மட்டுமே இருந்தது. சில பக்கங்களில் சரியாக எழுத்துகள் அச்சாகவில்லை. "வேற புக் இல்லைங்களா?" என்றேன் "இல்லை இது ஒண்ணுதாங்க இருக்கு!" என்றார் புத்தக கடைக்காரர். சரி படிப்போம் என்று வாங்கி வந்துவிட்டேன்.

"பார்க்கலாம் என்று எடுப்பீர்கள். படித்து முடித்துதான் எழுவீர்கள்." என்று பின்னட்டையில் எழுதியிருந்தார்கள். நான் படித்து முடித்த பிறகுதான் தெரிந்தது அது உண்மை என்று.

பெரும்பாலான தன்னம்பிக்கை இதழ்களில், ஒரு அறிவுரையாக, ஒரு கட்டுரையாக இருக்கும். வாழ்வில் முன்னேற்றமடைந்த பல தொழில் அதிபர்களைப் பற்றி, அவர்களின் வெற்றி தந்த சூத்திரங்களை அலசி ஆராய்ந்து மேற்கோள் காட்டி எழுதியிருப்பார்கள். அது போன்ற புத்தகங்களை தினமும் ஒரு பகுதி என்கின்ற ரீதியில்தான் நான் படிப்பேன். ஆனால் உண்மையில் முழு மூச்சாக படித்து முடிக்கக் காரணம் இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஒரு கதை போல கொண்டு போயிருக்கின்றார்.

அது மட்டுமில்லாது இப்பொழுது திருப்பூரில் தொழிலில் இருக்கும் பொருளாதார மந்த நிலையின் காரணமாகவும், சில தவறுகளினாலும் எனது வண்டி கொஞ்சம் சிரமமான நிலையில்தான் ஓடிக் கொண்டிருக்கின்றது. அது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

விக்னேஷ் என்பவர் ஒரு நிறுவனத்தின் மேலதிகாரி. சென்ற வருடத்தில் இருந்ததை விட இவரின் குழு விற்பனையில் மந்தநிலை எட்டவே, என்ன தவறு செய்தோம் என்பதை கண்டுபிடிக்க இயலாமல் இருக்கும் நிலையில், ஒரு நண்பரின் மூலம் தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கும் "சந்திரமௌலி" என்பவரிடம் சென்று ஆலோசனை பெறுகின்றார், "குருப்பயிற்சி" என்று அவரிடம் வாரம் ஒரு முறை சென்று அவரின் ஆலோசனையின் படி ஒவ்வொரு செயலையும் மாற்றம் செய்து தம்மை மேம்படுத்திக் கொள்கின்றார், தன்னுடைய செயல்களையும் மாற்றிக் கொள்கின்றான். அதில் முக்கியமானது அடுத்தவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் மற்றும் ஒருவரின் செயல்களை மனம் திறந்து பாராட்ட வேண்டும் என்பதை முக்கியமாக மாற்றிக் கொள்கின்றார். முன்னால் சிடுசிடுவேன்று தனக்கு கீழ் உள்ளவர்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்த வின்னேஷ், நண்பனைப் போல் அனைவரிடமும் பழகுகின்றான். இன்னும் பல ஆலோசனைகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றி பெறுகின்றான்.

இதை கதை போல, ஒரு நாவல் போல விறுவிறுப்பாக எழுதியிருக்கின்றார் நூலாசிரியர் சுரேகா. புதிய தொழில் தொடங்குவோர், செய்யும் தொழிலில் மந்த நிலையில் இருப்பவர்களுக்கு இந்த புத்தகம் ஆகச்சிறந்த ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. விக்னேஷ்க்கு ஒரு சந்திரமௌலி கிடைத்தது போல நமக்கும் சுரேகா அவர்களின் புத்தகம் வழி நடத்திச் செல்லும் என நம்புகின்றேன்! ஒரு சில எழுத்துப் பிழைகள் உள்ளது மட்டுமே, இந்த புத்தகத்தின் சிறு குறை எனலாம்! வலைப்பதிவில் எழுதுவது என்பது வேறு நாம் மட்டும்தான் படிக்க போகின்றோம், எழுதுவதும், திருத்துவதும் நாம்தான் அதனால் எதிர்பாராமல் ஏற்படும். ஆனால் புத்தகம் அப்படியல்ல, பல அறிஞர்கள், எழுத்தாளர்கள், படிக்கக் கூடும் அதனால் கூடுமான வரை பதிவர்கள் தங்கள் புத்தகங்களில் எழுத்துப் பிழை தவிர்க்கவும்.

பிரசுரம் : மதி நிலையம்
ஆன்லைனில் வாங்க : Discovery Book Place
மேலும் வாசிக்க

12/31/12

தமிழ்ச் செடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

2 கருத்துரைகள்


2012 நம்மை விட்டுப் பிரிந்து செல்கின்றது. 2013 இன்னும் சிறிது நேரத்தில் நம் கைகளில் தவழும் ஒரு குழந்தையாக. கடந்த வருடங்கள் இனிப்பான பல நிகழ்வுகளை விட சில கசப்பான நிகழ்வுகளை கடந்திருப்போம்! இந்த வருடமும் இன்பத்தையும் கடப்போம். துன்பத்தையும் கடப்போம் ஆனால் நினைவில் நிற்பது அதிகம் கசப்புகளே! கசப்பே வேண்டாம் என்பது உணவுக்கு மட்டும் உகந்ததல்ல, நம் உளவியலுக்கும் நல்லதல்ல. 

இந்த வருடத்தில் நாம் பல துன்பங்களை கண்டு துவழாமல் உற்சாகமாக போராடி வென்றிருப்போம். அதே போல் இந்த வருடமும் இறைவனை நாம் வேண்டுவது துன்பத்தை தாங்கும் வல்லமை தாராய் எனக் கேட்போம் அது போதும். 

சிறு துன்பதிற்கும் கலங்கிடும் மனம். எதிர்காலத்தில் கடினமான வாழ்க்கைச் சூழலில் கடப்பது சிரமம். ஆகவே திடமான மனமே தருவாய் என நம் பிராத்தனையாக இருக்கட்டும். 

அனைத்துப் பதிவுலக நண்பர்களுக்கும் தமிழ்ச்செடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்! 

இப்படிக்கு

தமிழ்ச்செடி நண்பர்கள்
மேலும் வாசிக்க

12/5/12

எழுத்தறிவித்தவன் இறைவன் - என் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்

6 கருத்துரைகள்


என் இனிய தமிழ் செடி உறவுகளே!  தன் தாய் மொழியை தன் உயிரைப்போலவே மதித்து தன் சந்ததிகளிடம் எவன் கொண்டு சேர்க்கிறானோ அவன் அந்த மொழி பேசும் மக்களின் மரியாதைக்கு உரியவன். நம் செடியில் இது வரை தமிழாசிரியர்களை பற்றி நண்பர்கள் பலர் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் வணக்கம்.

என் பள்ளி பருவத்தில் 12 ஆம் வகுப்பு வரை பல தமிழ் ஆசிரியர்களை சந்தித்துள்ளேன். அவர்கள் பலவிதமான குணத்தில் இருந்தாலும் அவர்களின் தமிழ் மொழி திறமை என்னை பெரிதும் வியக்க வைத்துள்ளது. தமிழ் மொழி எனபது நம் மொழி மட்டுமில்லை நமது அடையாளம்  என்பதை எனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் இவர்களே. முதலில் என் ஆரம்ப பள்ளி ஆசிரியரை பற்றி பார்ப்போம் :

தார்ச் சாலை  வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் பிறந்த நான் பள்ளி செல்ல இரண்டு கிலோ மீட்டர் நடந்து  பக்கத்துக்கு ஊரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அந்த பள்ளியில் நான் சேர்ந்த நாள் இன்றும் என் நினைவில் உள்ளது. என் தந்தையார் என்னை மிதி வண்டியில் அமர வைத்து என்னை அழைத்துச் செல்வார். என்னை போலவே இன்னும் பல சிறுவர்களும் தங்கள் பெற்றோர்களுடன் வந்து இருந்தனர், அவர்களில் சிலர் அழுது  கொண்டும் இருந்தனர். அந்த கூட்டத்தைப் பார்த்து எனக்கும் பயம் வந்தது, உடனே நான் “அப்பா வீட்டுக்கு போலாம்...!” என்று நச்சரிக்க தொடங்கினேன் காரணம் ஆசிரியர் என்பவர் அடிப்பார் என்ற காரணம். 

அப்போதுதான் நான் அவரை பார்த்தேன் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் வகுப்பறையில் ஒரு ஆசிரியர் அமர்ந்திருந்தார். சிகப்பு மற்றும் நீல நிறப் பேனாக்களை அவர் உபயோகித்து ஒரு மஞ்சள் நிற தாளில் அன்று சேர்ந்த, சேர வந்திருந்த குழந்தைகளின் பெயர்களை எழுதி கொண்டு இருந்தார். அவர்தான் வாத்தியார் என்று என் அப்பா சொன்னார். கூடுதலாக “நீ...! அழாமல் இருந்தால் அவர் மிட்டாய் தருவார்....” என்றும் கூறினார். 

நான் மிட்டாய்க்கு ஆசைப்பட்டு அமைதியாகி நின்று அவரின் செய்கைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு பெற்றோரையும் அழைத்தார், குழந்தைகளின் பெயரைக் கேட்டு, அந்த குழந்தைகளின் கைகளை தூக்கி தலை மேல் போட்டு குறுக்கிலிருந்து காதை தொடச் சொன்னார் அங்கிருந்த அத்தனைக் குழந்தைகளும் ஒவ்வொருவராக செய்து முடித்ததும் பட்டியலில் சேர்த்துக் கொண்டே வந்தார். 


என் முறை வந்தது...! என் அப்பா ஆசிரியரின் பக்கத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்தார்,  நான் என் அப்பாவின் மடியில் அமர்ந்தேன்.

“பையன் பெயர் என்ன? என்றார்.” 

என் அப்பா “சசிக்குமார்” என்கிறார் அவர் அந்த தாளில் என் பெயரை எழுதி விட்டு என்னையும் காதைத் தொடச் சொன்னார். எனக்கு கொஞ்சம் கை எட்டவில்லை...! இருந்தாலும் என் பெயரை எழுதி விட்டு சரி நீங்கள் விட்டு விட்டுச் செல்லுங்கள் என்றார். என் அப்பாவும் கிளம்ப நான் இடம் மறந்து அழ ஆரம்பித்தேன். 

உடனே அந்த வாத்தியார் எனக்கு ஒரு மிட்டாயைக் கொடுத்து “டேய் அழக் கூடாது...! அழுதா! எப்படி பெரிய ஆளா ஆவது?” என்று சொல்லி விட்டு என்னையும் என் போன்ற சில குழந்தைகளையும் அழைத்து அடுத்த கட்டிடத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கே நிறைய குழந்தைகள் இருந்தனர். அவர்களோடு நானும் தரையில் அமர்ந்தேன். 

இங்கிருந்துதான் தொடங்குகிறது என் பள்ளி வாழ்க்கை. ஆசிரியர்களின் அறிமுகமும் இப்போது தான் தொடங்கியது. அழும் குழந்தைகளுக்க்காக அவர் பல சேஷ்டைகள் செய்து காட்ட நானும் என் அழுகை மறந்து சிரித்தேன்.  அந்த ஆசிரியரின் பெயர் ராஜ மாணிக்கம் பெயருக்கு ஏற்றார் போல் கம்பீரமான நபராகவும் இருந்தார். வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டைதான் அணிவார். அவரின் கம்பீரம் இன்றும் என் நினைவில் உள்ளது. அவர்தான் எனக்கு என் விரல் பிடித்து அ ..ஆ இ ஈ  எழுதி பழக வைத்தார். 1 2 3  என்று எண்களை அறிமுகம் செய்து வைத்தார். உயிர் மெய் எழுத்துக்களை அறிமுகம் செய்து என் கல்வி என்ற உயிரின் தீபத்தை ஏற்றினார். நிறைய கதைகள் சொல்லி எனக்கும் என் போன்ற சிறார்களுக்கும் பள்ளிக்கூடம் பற்றிய பயத்தை போக்கியவரும் அவரே. 

என் வாழ்வின் ஒரு புதிய கதவு அன்று தான் திறந்தது. இன்று வரை என் கையெழுத்து அழகாக உள்ளது என்று மற்றவர்கள் என்னிடம் சொல்லும் போது அந்த புகழுக்கு சொந்தகாரர் அய்யா ராஜமாணிக்கம் அவர்கள்தான். அவரின் கை எழுத்து அவ்வளவு பிரமாதமாக இருக்கும், சிறு அடித்தல் திருத்தல் கூட இருக்காது கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். மணி..... மணியாக இருக்கும், அவர் என் கை பிடித்து இரட்டைக் கோடு போட்ட, நான்கு கோடு போட்ட தாள்களில் எழுதப் பழக்கியது தான் முக்கியக் காரணமாக இருந்தது. 

மூன்றாம் வகுப்பு வரை அவரே என் வகுப்பின் ஆசிரியராக இருந்தார்.  எனக்கு மட்டுமல்ல, மற்ற மாணவர்கள் அனைவருக்கும் அவர் மேல் அதிக அளவு பாசமாக இருந்தனர். அன்புடன் சேர்த்த பண்புடனும், கண்டிப்புடனும் பாடங்களை நடத்துவார். வகுப்பறையில் குழந்தைகள் திடீரென்று மலம் சிறுநீர் போய் விட்டாலும் முகத்தை சுழிக்காமல் அவர்களுக்கு ஆசிரியரே உதவி செய்து சுத்தம் செய்வார். 


விளையாட்டு மற்றும் உடைகளை நேர்த்தியாக அணிதல் மற்றும் பள்ளியினைச் சுத்தப் படுத்துதல் போன்றவற்றையும் கற்றுத் தந்தார். ஓவியம் வரைவார், பாடல்கள் பாடுவார், விடுகதைகள் போடுவார், இப்படி  சிறார்களுக்குப் பிடித்த மாதிரி பாடங்கள் எடுப்பது மட்டுமில்லாமல் முடிந்தவரைக்கும் மாணவர்களைப் பாராட்டு மழையில் நனைய வைப்பார். அதனாலேயே இன்னும் என் போன்ற மாணவர்களின் மனதில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார் இப்போது எந்த பள்ளியில் விரல் பிடித்து எழுத கற்றுத் தருகின்றார்கள் ?

அவர் என் பக்கத்துக்கு ஊர்தான்! அவருக்கு மூன்று பிள்ளைகள், இரண்டு ஆண்கள், ஒரு பெண் முறையே மூவரையும் நன்கு படிக்க வைத்து ஒருவரை போலீஸ் அதிகாரியாகவும், இன்னொருவரை எல்.ஐ.சி யில் அதிகாரி ஆகி பெண் பிள்ளையை ஆசிரியராகவும் உருவாக்கியுள்ளார். அவர் ஓய்வு பெற்ற பின்னும் ஊரில் உள்ள பிள்ளைகளுக்கு இலவசமாக டியூஷன் சொல்லி கொடுத்து கொண்டு இருந்தார். இப்போது எடுப்பது இல்லை. இப்போது அவர் ரீ சார்ஜ் செய்யும் கடை வைத்து கவனித்து வருகிறார், எப்படியாவது அவரை வாரத்தில் மூன்று முறை சந்தித்து விடுவேன் அவருக்கு உடல் நலமில்லாமல் போனால் என்னைத்தான் அழைப்பர், நான் சென்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன். இன்று வரையிலும் அவர் எனக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார் நிறைய படி எழுது என்று பல ஆலோசனைகளையும் தருகின்றார். 

நான் எனது தம்பி எனது தங்கை ஆகியோர் அவரிடம்தான் படித்தோம், ஆனால் அவரை போலவே ஆசிரியர் ஆகவேண்டும் என்று நானும் எனது தம்பியும் நினைத்தது இல்லை. என் தங்கை மட்டும் அவரை போலவே ஆசிரியராக வேண்டும் என்று கனவு கண்டார். வெற்றியும் பெற்று விட்டார். 

இதை அவர் என்னிடம் அடிக்கடி சொல்லி சந்தோசப் படுவார்! இப்படி பட்ட கொடுப்பினை இப்போது வரும் தலைமுறைக்கு கிடைப்பது இல்லை, காரணம் நமது கல்வி முறை ஆரம்ப பள்ளி தமிழில் படித்தால் கேவலம் என்ற மனப்பான்மை பெருகிவிட்டது நம் மக்களிடம், ஆகவே என் கிராமத்தில் கூட பொருளாதார ரீதியாக துன்பப் பட்டு ஆங்கில வழிப் பள்ளிக்குதான் அனுப்புகின்றனர் ..ரொம்பவும் வேதனைப் படக் கூடிய விசயமாக தெரிகின்றது எனக்கு.

அவ்வளவு சிறப்பான ஆசிரியர் என் ஆரம்ப பள்ளியில் அமைந்தது என் அதிர்ஷ்டம் என்றே கூறலாம். இன்று வரை என் படிப்பின் சிறப்புக்கு அவரே காரணம் அவரின்றி நன்கு அமைந்திருக்காது என் கல்வி வாழ்க்கை. “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்று சொல்லுவார்கள் எனக்கும் என்போன்ற என் சக மாணவர்களுக்கும் அவர் தான் என்றுமே இறைவன்! அவரால் விரல் பிடித்து எழுத பழகியவர்கள்தான் இன்று மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பொறியாளர்களாகவும், உயர்ந்த பதவியில் இருக்கின்றனர். அவரின் மாணவன் என்பதில் நான் எப்போதும் பெருமிதம் கொள்கிறேன் ஐயா ராஜமாணிக்கம் எனக்கு இறைவனே

நம் தாய் மொழியில் படிப்பது அவ்வளவு கேவலமாய் போய் விட்டதா ?ஆங்கிலம் வேண்டும்தான் அதற்காக நம் உயிர் போன்ற தமிழை தூக்கி எரிந்து கொலை செய்வதா? நாமே நம் மொழியினை மதிக்காமல் போனால் வேறு யார் மதிப்பார்கள் ? என்கின்ற வினா என் மனதில் எழுகின்றது அனைவருக்கும் இப்படி பட்ட ஆசிரியர்கள் வாய்க்க வேண்டும்! வெறும்படிப்பினை மட்டும் சொல்லித்தருகிற கல்வியாளர்கள் வேண்டாம்! படிப்புடன் நாம் வாழத் தேவையான அனைத்து விசயங்களையும் சொல்லி தருகிறவர்கள் வேண்டும் என்பதே என் கனவும், ஆசையும்!

வெறும் நூறு சதவிகித தேர்ச்சிக்கு மட்டும் தான் பள்ளிகளா? மாணவர்கள் எந்திரங்களா? நாம் தெரிந்தே வரும் தலைமுறைக்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை! இயற்கை வளங்களைக் காக்க மறந்தோம், நீலம், தானே போன்ற புயல்களை சந்திக்கின்றோம். பல பேரிடர்பாடுகளை சந்திக்கின்றோம் அதைப் போலவே நம் தாய் மொழியையும் இழக்கப் போகின்றோம். சமூக சீர்கேட்டின் ஆதாரமாக இருக்கப் போகின்றது. மொழி என்பதன் அடித்தளத்தில் தான் கலாச்சாரம் உருவாகின்றது. வேறொரு மொழி நம்முடைய கலாச்சாரத்தின் கூறுகளை சொல்வதில்லை. நமது அடிப்படை வாழ்க்கை முறையே மாறிவிடும்.  அப்படித்தான் தற்போது மாறிக் கொண்டிருக்கின்றது.

குழந்தைகள் ஆங்கில மொழியில் படிக்க வைப்பது தவறில்லை.  ஆனால் வீட்டில் தாய்மொழியை கற்றுக் கொடுத்து பேச எழுத வைக்கலாம். ஆங்கில வழி பள்ளிகளில் தமிழை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை நாம் தமிழர்கள்தானே? நம் மொழியை பேசுவதில் என்ன கேவலம் ? “தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன்” என்று பாடிய புரட்சி கவிஞர் இன்று இருந்தால் கொலைவாளினை எடுத்து நிறைய பேர்களின் தலைகளை சீவி இருப்பார்.

கல்வியில் மட்டுமில்லை! அனைத்து இடங்களிலும்...!  ஏன்? வங்கிகளில் தமிழில் ஒரு கடிதம் எழுதினாலே கேவலமாகப் பார்கின்றனர் தமிழர்களே! தமிழை நிராகரிக்கின்றனர். எனது முக நூல் கணக்கை நான் தமிழில் வைத்து இருப்பதாலேயே அதிக நண்பர்கள் எனது நட்பு கோரிக்கையை ஏற்க மறுக்கின்றனர். ஆங்கிலத்தையும் தமிழையும் சேர்த்து எழுதி தங்கீலிஷ் என்ற புது மொழியை உருவாக்கி உள்ளனர். 

இது நம் மொழிக்கு செய்கின்ற துரோகம் இல்லையா...? இரண்டு மொழிகளையும் சேர்த்து தான் நாம் கேவலம் செய்கிறோமே! அப்படி எந்த விதத்தில் நம் மொழி குறைந்து போய்  விட்டது? தொழில் வாழ்க்கைக்கு ஆங்கிலம் முக்கியம் என்பதால் மட்டும் தான் இன்று உலகம் முழுக்க ஆங்கிலம் கோலோச்சுகின்றது. ஆனால் சம்பாதிப்பது வாழத்தானே? வாழ்க்கை மொழியென்பது நமக்கு தமிழ் தானே?  

மொழி எனபது நமது அடையாளம் அந்த அடையாளத்தை தொலைத்துவிட்டு நாம் எப்படி வாழ முடியும்? எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என முழங்குகிறோம் வெறும் முழக்கத்தோடு நின்றுவிடுகிறோம் ..அதனாலேயே நம் தமிழை நாமே கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்கிறோம் எத்தனை காவியங்கள்..காப்பியங்கள்  நம் அழகுத் தமிழில்..? 

தாயை பழிப்பதும் நம் தமிழை பழிப்பதும் ஒன்றுதான் தாயை பழித்தால் எவ்வளவு கோபம் வருகிறதோ...! அது போலவே தமிழை பழித்தாலும் பெரும் கோபம் வரவேண்டும் நண்பர்களே! 

தமிழ்செடிக்காக........
செல்வன்: சசிமோகன்குமார்

மேலும் வாசிக்க

12/3/12

குழந்தைகளிடத்தில் தமிழை வளர்ப்போம்!

6 கருத்துரைகள்

வணக்கம் நண்பர்களே!
நமது நாட்டில் சமூக பழக்க வழக்கங்களும் கலாசாரமும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு நம்மை உயர்தர வாழ்க்கை முறைக்கு முன்னேற்றி (மாற்றி ) கொண்டுவரும் அந்நியநாட்டு(ஆங்கில) பழக்க வழக்கங்களும், கலாசாரமும் நமது பழம்பெரும் மொழியாம் தமிழ் மொழியைத் தரம் தாழ்த்திக்கொண்டுபோகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆம், தமிழில் ஆங்கில கலப்பில்லாமல் நம்மால் பேசமுடியாத சூழ்நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம். வாழும் தலைமுறையான நாமும் தமிழ்ச் சொற்கள் தெரிந்தாலும், ஆங்கில கலப்பில் பேசவே விரும்புகிறோம். ஏனெனில் நமது ஸ்டேட்டஸ் அதையே விரும்புகிறது. 

ஆனால், வளரும் தலைமுறையான இன்றைய குழந்தைகளும் ஆங்கில கலப்பில்தான் பேசுகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நாம்தான் அவர்களை ஆங்கிலத்தைக் கட்டாய முதன்மைப் பாடமாகவும், மற்றொரு அந்நிய மொழியை (உம்: பிரெஞ்ச்) கட்டாய இரண்டாம் பாடமாகவும் கொண்டுள்ள பள்ளிகளில் சேர்த்துவிடுகிறோம். அங்கு இந்திய மொழிகள் விருப்பப் பாடமாக  உள்ளது. பெரியவர்களாக ஆனபின் அந்தக் குழந்தை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அவர்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டி  நாம் ஹிந்தி மொழியை அவர்களுக்குத் தேர்வு செய்து தருகிறோம். இதனால், நமது தமிழ் மொழி அவர்களிடத்தில் வெறும் பெயரளவுக்கே உள்ளது.

நாம் அவர்களிடத்தில் வீட்டில் தமிழில் பேசினாலும், பள்ளிகளிலோ ஆங்கிலத்தில் பேசவே அவர்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். தமிழில் பேசினால் தண்டனை எனவும் சில பள்ளிகளில் இருப்பதால் வேறு வழியில்லாமல் குழந்தைகள் தமிழை மறக்க நேரிடுகிறது. அக்குழந்தைகள் இவ்வாறு ஆங்கிலத்தில் பேசிப் பழக்கமாவதால், அவர்கள் வீட்டில் பெற்றோர்களிடத்தில் ஆங்கிலத்தில் பேசவே மறைமுகமாக உந்தப்படுகிறார்கள். வேறு வழியில்லாமல்  நாமளும் அவர்களிடத்தில் ஆங்கிலத்திலேயே பேசவேண்டி உள்ளது.

எனது உறவினர் குடும்பமாக அயல் நாட்டில் சுமார் இருபது வருடங்களுக்குமேல் வசித்துவருகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் தமிழை நமக்குச் சமமாகப் பேசுகிறார்கள். 'மாமா எப்படி இருக்கீங்க’ 'அத்தை எப்படி இருக்கீங்க’ என்றும் அழகாகத் தமிழில் அழைக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களின் பெற்றோர்கள் தான். அவர்கள் குழந்தைகளிடத்தில் பேசும்போதும், அவர்களுக்குள் பேசும் போதும் தமிழில் பேசுகிறார்கள், எங்களை அக்குழந்தைகளிடத்தில் அறிமுகம் செய்யும்போதும் மாமா, அத்தை என்று தமிழிலேயே அறிமுகம் செய்கிறார்கள். இதனால், அவர்கள் தமிழ் மொழியினை அறிய வாய்ப்புக் கிடைக்கறது.
இதையே நம்மூரில் எடுத்துக்கொள்ளுங்களேன்,  ' hi, uncle how are you?' என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். நாமும் அவர்களுக்கு , ' ya i'm fine' என ஆங்கிலத்தில் பதில் சொல்லியே பழகிவிட்டோம்.

எனவே,  குழந்தைகள்  தமிழை முடிந்தஅளவு பேசிப்பழக  நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும். தமிழ் மொழிப் பயிற்சிப் புத்தகங்கள், திருக்குறள், ஆத்திச்சூடி புத்தகங்கள் என குழந்தைகளின் மனது ஏற்கும் அளவுக்குத் தமிழை அவர்களிடத்தில் உட்புகுத்தலாம். அவர்களின் பாடங்களோடு தொடர்புடைய தமிழ் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு சொல்லித்தரலாம்.

ஆங்கில கார்ட்டூன், பொம்மை படங்களைப் பார்க்கவிடாமல் தமிழில் வரும் கார்ட்டூன், பொம்மை படங்களை பார்க்கச் சொல்லலாம். சிறுவயதில் நாம் தமிழில் கதை கேட்டு வளர்ந்ததைப்போல, குழந்தைகளுக்கும் தமிழில் கதைகளைச் சொல்லலாம்.

குழந்தைகளின் வருங்காலத்தைக் கவனத்தில்கொண்டு அவர்கள் ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாக எடுத்தாலும், தமிழை இரண்டாம் முதன்மைப் பாடமாக எடுத்து அவர்கள் மூலம் தமிழை அழியவிடாமல் வளரச் செய்வது தமிழனான நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
தமிழ்செடிக்காக
மேலும் வாசிக்க
 

மேலே செல்